பதிவு செய்த நாள்
20
மே
2023
04:05
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த வைகாசி அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் குவிந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு வைகாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அன்று காலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இரவு 11 மணிக்கு ஐகத் ஜனனி அலங்காரத்தில் உற்சவர் அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி அங்காளம்மனை வழிபட்டனர். தொடர்ந்து நடந்த ஊஞ்சல் தாலாட்டில் கோவில் பூசாரிகளும், பக்தர்களும் பக்தி பாடல்களையும், அம்மன் தாலாட்டு பாடல்களையும் பாடினர். ஏராளமான பக்தர்கள் சாமி வந்து ஆடினர். தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். விழுப்புரம் கலெக்டர் பழனி, கள்ளக்குறிச்சி எஸ்.பி., மோகன்ராஜ், திண்டிவனம் சப் கலெக்டர் ரவி கட்டா தேஜா ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சந்தானம் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர். ஏ.டி.எஸ்.பி., கோவிந்தராஜ் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, காஞ்சிபுரம், கடலுார் உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் சிறப்பு பஸ்களை இயக்கினர்.