பதிவு செய்த நாள்
20
மே
2023
05:05
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஸ்ரீதர், வரலாற்று துறை பேராசிரியர்கள் தஞ்சாவூர் அருகே பல்லவர் கால தவ்வை சிற்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் சோழபுரத்தில் காமராஜர் தெருவில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர் கலா, செந்தில்குமார், அருப்புக்கோட்டை வரலாற்று ஆய்வாளர் ஸ்ரீதர் கள ஆய்வு செய்தனர். இதில் 9 ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் கால தவ்வை என்ற மூத்த தேவி சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அவர்கள் கூறியதாவது : தவ்வை சிற்பம் இருக்கும் பகுதிகள் செல்வ செழிப்பாக இருக்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை. அதனை உறுதிப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கிடைத்துவரும் தவ்வை சிற்பங்கள் பெரும்பாலும் நீர் நிலைகள் அருகிலேயே கண்டறியப்பட்டுள்ளன. தற்போது நாங்கள் கண்டறிந்த தவ்வை சிற்பமும் தூர்ந்து போன நீர் நிலை ஓரமாக கிடைத்தது. இந்த சிற்பம் காசி விஸ்வநாதர் என்னும் சிவன் கோயிலில் காணப்படுகிறது. இது 3 அடி அகலமும், 2 அடி உயரமும் கொண்ட பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக உள்ளது. நடுவில் தவ்வை என்னும் மூத்த தேவியும், வலது புறம் மகன் மாந்தனும், இடது புறம் மகள் மாந்தியும் சுகாசன கோலத்தில் அமர்ந்தவாறு செதுக்கப்பட்டுள்ளது. மூன்று திருவுருவங்களின் கைகளில் உள்ளவைகள் சற்றே சிதைந்து காணப்படுகிறது. இந்தச் சிற்பம் காசி விஸ்வநாதர் கோவிலில் வழிபாட்டில், பல்லவர் கால விநாயகர், சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, சங்க நிதி, பத்மநிதி, பிரம்ம சாஸ்தா சிற்பங்கள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு காணப்படும் பிரம்ம சாஸ்தா சிற்பம் யானை மீது அமர்ந்த நிலையில் இருப்பது கூடுதல் சிறப்பு. இங்குள்ள ஒவ்வொரு சிற்பமும் பல்லவர்களின் கலை நேர்த்தியை இன்று வரை பறைசாற்றி வருகின்றன, என்று கூறினர்.