சீர்காழி சட்டைநாதர் கோவிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மே 2023 09:05
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல் காலை யாகசாலை பூஜைகள் இன்று இரவு தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் தொடங்கியது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். மேலும் இங்கு சிவபெருமான் மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். திருஞானசம்பந்தர் இத்தலத்தில் உமையம்மை அளித்த ஞான பாலினை அருந்தி தனது மூன்றாவது வயதில் தேவாரத்தின் முதல் பதிகமான தோருடைய செவியன் என்ற பதிகத்தை பாடினார் என்பது வரலாறு. இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் கும்பாபிஷேகம் 32 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 24ஆம் தேதி காலை ஒன்பது மணிக்கு நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 16ஆம் தேதி முதல் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நேற்று புனித நீர் எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இன்று மாலை கோவிலின் மேற்கு கோபுர வாசல் அருகே 88 யாக குண்டங்களுடன் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாத்ரா ஹோமம், யாத்ரா தானம் மற்றும் யாகசாலை பிரவேசம் நடைபெற்றது. தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. பூஜைகளை திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்தி வருகின்றனர். யாகசாலை பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.