பதிவு செய்த நாள்
22
மே
2023
10:05
அன்னூர்: காட்டம்பட்டி, தன்னாசியப்பர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
காட்டம்பட்டி அருகே பார்வதிபுரத்தில், உமாசுத விநாயகர், கருப்பராயன், தன்னாசியப்பர், கன்னிமார் சுவாமி மற்றும் நாகர் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்றன. கடந்த 19ம் தேதி கணபதி ஹோமம் மற்றும் நவகிரக ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. மாலையில் கன்னிமார் கோவிலிலிருந்து முளைப்பாரி எடுத்து வருதல், எண் வகை மருந்து சாத்துதல் நடந்தது. 20ம் தேதி முதற்கால யாக பூஜை நடந்தது. மாலையில் காட்டம்பட்டி வளர் இளம் ஒயிலாட்ட கலைக்குழுவின், ஒயிலாட்டம் மற்றும் கும்மியாட்டம் நடந்தது. நாட்டுப்புறப் பாடல்களுக்கு சிறுவர், சிறுமியர் மற்றும் பெரியவர்கள் நளினமாக ஆடியது பொதுமக்களை கவர்ந்தது. நேற்று அதிகாலை இரண்டாம் கால வேள்வி பூஜை நடந்தது. காலை 8:15 மணிக்கு விநாயகர், கருப்பராயன், தன்னாசியப்பர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி சுப்பிரமணிய சிவாச்சாரியார் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் கோ மாதா பூஜை, தச தரிசனம், மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.