சீர்காழி சட்டைநாதர் கோவிலில் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2023 12:05
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். மேலும் இங்கு சிவபெருமான் மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். திருஞானசம்பந்தர் இத்தலத்தில் உமையம்மை அளித்த ஞான பாலினை அருந்தி தனது மூன்றாவது வயதில் தேவாரத்தின் முதல் பதிகமான தோருடைய செவியன் என்ற பதிகத்தை பாடினார் என்பது வரலாறு. இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் கும்பாபிஷேகம் 32 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 24ம் தேதி காலை 8:30 மணிக்கு தொடங்கி 10 மணிக்குள் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 16ஆம் தேதி முதல் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து 20ம் தேதி முதல் கோவிலின் மேற்கு கோபுர வாசல் அருகே 88 யாக குண்டங்களுடன் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாத்ரா ஹோமம், யாத்ரா தானம் மற்றும் யாகசாலை பிரவேசம் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை சட்டைநாதர் கோவில் வளாகத்தில் உள்ள பரிவார மூர்த்திகளான ஆபத்த காத்த விநாயகர், சுப்பிரமணியர், ருணம் தீர்த்த விநாயகர், அஷ்ட பைரவர் உள்ளிட்ட கோவில்களில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமாக சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கடங்கள் புறப்படு செய்யப்பட்டு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது அதனைத் தொடர்ந்து தீப ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் தருமபுரம் ஆதீனம் கட்டளை தம்பிரான்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.