பதிவு செய்த நாள்
22
மே
2023
01:05
தென்தாமரைகுளம்: சாமிதோப்பு அய்யாவை குண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று அய்யாவழி பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை முதலே கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, சென்னை , கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் குவிந்தனர். முத்திரிகிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து பால், பழம், பன்னீர் , தேங்காய் , பூ ஆகியவற்றை சுருளாக வைத்து அய்யாவை வணங்கி சென்றனர். அதிகாலை நடை திறக்கப்பட்டு உகப்படிப்பு, வாகன பணிவிடை, நித்தப்பால் தர்மம், மதியம் உச்சிபடிப்பும் பின்னர் அன்னதர்மமும் நடந்தது. குரு பால ஜனாதிபதி, அய்யாவழி சமயம் மற்றும் அய்யாவை குண்ட சாமியின் அற்புதங்கள் குறித்து பக்தர்களிடையே ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். மாலை பிச்சிப்பூ அலங்கரிக்கப் பட்ட அன்ன வாகனத்தில் அய்யா எழுந்தருளி பதி மற்றும் ரதவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் ரத வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.