பதிவு செய்த நாள்
24
மே
2023
05:05
கிருஷ்ணகிரி: ஜீனுார் அமிர்தகண்டேஸ்வரர் கோவிலில், சிலைகள் மாயமான விவகாரத்தில், திருட்டு வழக்கு பதிந்து, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இந்து முன்னணி அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி அடுத்த ஜீனுாரில் பழமையான அமிர்தகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைக்கப்படவில்லை எனவும், கோவில் சிலைகள் மாயமானது குறித்தும், ‘காலைக்கதிர்’ நாளிதழில் நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, அக்கோவிலை இந்து முன்னணியினர், மாவட்ட தலைவர் கலைகோபி தலைமையில் நேற்று பார்வையிட்டனர். பின்னர் நிருபர்களிடம், கலைகோபி கூறியதாவது: பழமையான அமிர்தகண்டேஸ்வரர் கோவில் புனரமைக்கப்படாமல் சீரழிந்துள்ளது. கோவிலில் இருந்த சிவன் உட்பட பல சிலைகள் காணாமல் போய் உள்ளன. இது குறித்து போலீசார் திருட்டு வழக்குப்பதிந்து, காணாமல் போன சிலைகளை மீட்க வேண்டும். மாவட்டத்தில் பல பழமையான கோவில்களின், விலை மதிப்பற்ற சிலைகளை குறி வைத்து, சில கும்பல் திருடி வருகிறது. அவர்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் உடனடியாக புனரமைக்கப்பட்டு, தினமும் பூஜை நடத்தப்பட வேண்டும். இது குறித்து, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடமும் பேசியுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.