நயினார்கோவிலில் வைகாசி வசந்த உற்சவ விழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மே 2023 05:05
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள நயினார்கோவில் சவுந்தர்ய நாயகி சமேத நாகநாத சுவாமி கோயிலில் வைகாசி வசந்த உற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற சிறப்புகள் பெற்ற இக்கோயிலில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற வருகை தருவர். மேலும் இப்பகுதி விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த விளை பொருட்களை முதலில் நாகநாத சுவாமிக்கு சேர்ப்பது வழக்கம். இச் சிறப்பு வாய்ந்த கோயிலில் வைகாசி வசந்த உற்சவ விழா கொடியேற்றம் நேற்று காலை 6:30 மணிக்கு நடந்தது. மாலை சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வலம் வந்தனர். தினமும் காலை, இரவு பல்வேறு வாகனங்களில் அலங்கரிக்கப்பட்டு தீப ஆராதனைகள் மற்றும் வீதி வலம் நடக்கிறது. முக்கிய நிகழ்வுகளாக மே 29 சமணர்களுக்கு முக்தி கொடுத்தல், திருஞானசம்பந்தருக்கு திருமுலை பால் ஊட்டல், மே 31 ஸ்ரீ நடராஜர் புறப்பாடு, திருமுறி பட்டயம் வாசித்தல், சுந்தரமூர்த்தி சுவாமி திரு ஊடகம் தீர்த்தல் லீலை நடக்கிறது. ஜூன் 1 காலை 9:00 மணி முதல் கோயில் ரத வீதிகளில் தேரோட்டம் நடக்க உள்ளது. ஜூன் 2 காலை 9:00 மணிக்கு தீர்த்த வாரி விழாவும், இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி எழுந்தருளி சப்தாவரணம் விழா மற்றும் ஜூன் 5 உற்சவ சாந்தியுடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை பரம்பரை அரங்காளர் ராஜேஸ்வரி நாச்சியார், நிர்வாக செயலாளர் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் வைரவ சுப்ரமணியன் செய்துள்ளனர்.