பதிவு செய்த நாள்
14
ஜூன்
2023
05:06
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், ஏகாதசி வைபவம் நடந்தது.
கோவை மாவட்டத்தில் உள்ள வைணவ ஸ்தலங்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவில். இங்கு ஒவ்வொரு மாதமும் ஏகாதசி வைபவம் நடைபெறும். இன்று வைகாசி மாத, கிருஷ்ண பக்ஷ ஏகாதசி வைபவம் நடந்தது. அதிகாலை கோவில் நடை திறந்து, மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், கால சந்தி பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து விஸ்வக்சேனர் பூஜை, கலச ஆவாகனம் ஆகிய பூஜைகள் நடந்தன. பின்பு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாளுக்கு, ஸ்தபனத் திருமஞ்சனம் செய்யப்பட்டது. வெள்ளி சிம்மாசனத்தில் மேள, தாளம் முழங்க, கோவில் வளாகத்தில் அரங்கநாத பெருமாள் புறப்பாடு நடைபெற்றது. ஆஸ்தானம் அடைந்தவுடன் உச்சக்கால பூஜை, சற்று முறை சேவித்து, மகா தீபாராதனை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த வைபவத்தில் கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், மிராசுதாரர்கள், கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.