ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூன் 2023 01:06
கள்ளக்குறிச்சி, : ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. ரிஷிவந்தியம் அடுத்த ஆதிதிருவரங்கத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 11 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் உண்டியல்கள் திறந்து காணிக்கை பணம் எண்ணப்பட்டது. 5 மாதங்களுக்கு பிறகு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி அறநிலையத்துறை உதவி இயக்குனர் சிவாகரன், அறங்காவலர் குழு தலைவர் பாலாஜிபூபதி ஆகியோர் மேற்பார்வையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. கோவில் செயல் அலுவலர் பாக்கியராஜ், இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி ஆகியோர் முன்னிலையில், கோவில் ஊழியர்கள் பிரகாஷ், விமல் உட்பட 40க்கும் மேற்பட்ட பணியாளர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், 20 லட்சத்து 55 ஆயிரத்து 538 ரூபாய் பணம் இருந்தது. தொடர்ந்து காணிக்கை பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. மணலுார்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.