வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆனி மாத அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனை முன்னிட்டு தானிப்பாறை மலை அடிவார தோப்புகளில் நேற்று நள்ளிரவு முதல் பக்தர்கள் குவிந்தனர். இன்று காலை 6:40 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். வெயிலின் தாக்கம் குறைந்து, குளுமையான சூழல் நிலவிய நிலையில், மதியம் 12:00 மணியை கடந்தும் ஏராளமான பக்தர்கள் வந்த நிலையில் மதியம் 2:00 மணி வரை சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு அமாவாசை வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். மலையில் கோயில் நிர்வாகத்தின் சார்பிலும், அடிவாரத்தில் தனியார் மடங்கள் சார்பிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. வத்திராயிருப்பு மற்றும் சாப்டூர் வனத்துறை, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.