நாகர்கோவில்: காந்தி ஜெயந்தி தினமான நேற்று, கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் அவரது அஸ்தி கலசம் வைக்கப்பட்ட இடத்தில் விழுந்த சூரிய ஒளியை நூற்றுக்கணக்கானவர்கள் கண்டு, காந்திக்கு அஞ்சலி செலுத்தினர். காந்தியின் அஸ்தி 1948 பிப்.,12ல் கன்னியாகுமரி கடலில் கரைக்கப்பட்டது. முன்னதாக கடற்கரையில் அவரது அஸ்தி வைக்கப்பட்டு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் மண்டபம் கட்டப்பட்டு 1956ல் திறக்கப்பட்டது. காந்தி ஜெயந்தி அன்று 12 மணிக்கு அவரது அஸ்தி கலசம் வைக்கப்பட்ட இடத்தில் சூரிய ஒளி விழும் வகையில் மண்டபம் வடிவமைக்கப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தி தினத்துக்கு இரண்டு நாட்கள் முன்னதாக அதாவது செப்., 30 முதலே மேற்கூரை துவாரம் வழியாக சூரிய ஒளி வரும். காந்தி ஜெயந்தி நாளில் மட்டும், அஸ்திகலசம் மீது ஒளி விழும். நேற்று சரியாக 11.55 மணிக்கு உள்ளே விழுந்த சூரிய ஒளி சிறிதுசிறிதாக நகர்ந்து 12 மணிக்கு அஸ்தி கலச பீடத்தின் மீது விழுந்தது. கூடிநின்றவர்கள் உணர்ச்சி பெருக்குடன் காந்திக்கு அஞ்சலி செலுத்தினர். முன்னதாக ராட்டையில் நூல்நூற்கும் நிகழ்ச்சியும், பாடல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் குமரி மாவட்ட கலெக்டர் நாகராஜன், நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ., உட்பட பலர் கலந்து கொண்டனர்.