பதிவு செய்த நாள்
03
அக்
2012
10:10
ஓசூர்: ஓசூர் அருகே உத்தனப்பள்ளியில், 500 அடி பைரப்ப மலை மீது உள்ள பைரப்ப ஸ்வாமிக்கு, பொதுமக்கள் சிறப்பு பூஜை செய்து, அன்னதானம் வழங்கினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நடப்பாண்டு பருவ மழை முற்றிலும் பொய்த்தது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் வறண்டு ஆழ்துளை கிணறுகள், விவசாய கிணறுகள் வறண்டு விட்டதால், விவசாயத்துக்கு தண்ணீர் இல்லாமல், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.மாவட்டம் முழுவதும் மழை வேண்டி, பொதுமக்கள் பல்வேறு நூதன வேண்டுதல், பூஜைகளை செய்து வருகின்றனர். ஓசூர் அருகே உத்தனப்பள்ளியில், 500 அடி உயரத்தில் உள்ள பைரப்ப மலை மீது உள்ள பைரப்பா ஸ்வாமிக்கு, பொதுமக்கள் சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்து வழிப்பட்டனர்.பல்வேறு உணவு பொருட்கள், அபிஷேக பொருட்களை படைத்து, அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பங்கேற்றனர்.