20 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூலை 2023 12:07
தஞ்சாவூர்: தஞ்சை, திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
திருப்பனந்தாள் அருணஜடேஸ்வர கோயில் சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 39 வது தேவாரத்தலம் ஆகும். கொள்ளிடம் ஆற்றின் தென்பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் மேற்கு நோக்கிய 7 நிலை ராஜகோபுரம். கிழக்கில் 5 நிலை கோபுரம், மூன்று பிரகாரகங்களுடன் கோயில் உள்ளது. சிவனும் அம்மனும் கிழக்கு நோக்கி திருமண கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான இக்கோயிலில் குமரகுருபரர் ஏற்படுத்திய காசிமடம் உள்ளது. சிறப்பு மிக்க இக்கோயிலில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. முன்னதாக, ஜனவரி 18ம் தேதி பாலாலயத் திருப்பணி தொடங்கியது. 2 ராஜகோபுரங்கள் மற்றும் 10 விமானங்களில் தங்க முலாம் பூசிய 50 செப்பு கலசங்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் ரூ.3 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டது. விழாவை முன்னிட்டு 15 ஆயிரம் சதுரடி பரப்பளவில் யாகசாலை அமைக்கப்பட்டு, கால பூஜை துவங்கியது. இன்று (7 ம்தேதி) காலை 8ம் கால யாக பூஜையும், மகா பூர்ணாஹூதி நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று காலை 9.30 மணிக்குக் கோபுரம், விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், 10.30 மணிக்கு மூலவர்களுக்கு அபிஷேகமும் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. இக்கோயிலில் 1968ம் மற்றும் 2003ம் ஆண்டுகளில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிபிடத்தக்கது.