பதிவு செய்த நாள்
11
ஜூலை
2023
05:07
திருப்பத்துார்; திருப்பத்துார் அருகே, 3,500 ஆண்டுகள் பழமையான கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டன. திருப்பத்துார், துாய நெஞ்சக் கல்லுாரி பேராசிரியர் பிரபு, தொல்லியல் ஆய்வாளரும் வரலாற்றுத்துறை பேராசிரியருமான சேகர், ஆய்வு மாணவர் தரணிதரன் மற்றும் சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர், கந்திலி அருகே மேற்கொண்ட கள ஆய்வில், 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட, புதிய கற்கால தடயங்களான கற்கருவிகள் மற்றும் அவற்றை கூர்மைப்படுத்திய இடத்தை கண்டறிந்தனர்.
இது குறித்து, கல்லுாரி பேராசிரியர் பிரபு கூறியதாவது: திருப்பத்துார் மாவட்டம், கந்திலி அருகே சந்திரபுரம் மலை அடிவாரத்தில் நடத்திய கள ஆய்வில், புதிய கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவிகள் கண்டறியப்பட்டன. இங்கிருந்து, 50 மீட்டர் தொலைவில் சந்திரபுரம் மலையிலிருந்து வரும் ஓடையில் மேற்கொண்ட ஆய்வில், 12 செ.மீ., நீளம் கொண்ட மூன்றும், 6 செ.மீ., நீளம் கொண்ட ஒன்றும் என, 4 கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன. இக்கருவிகள் நன்கு பளபளப்பாக தீட்டப்பட்டு வேட்டையாடுவதற்கும், மரங்களை வெட்டுவதற்கும் கற்கோடரிகளாக பயன்படுத்தி உள்ளனர். அத்தகைய மக்களே சந்திரபுரம் பகுதியில் வாழ்ந்துள்ளனர் என்பதற்கு, இவைகளே சான்றுகளாக அமைகின்றன. ஏற்கனவே இங்கு, கற்கால மக்கள் வாழ்ந்த குகை, பாறை ஓவியங்கள் கண்டறிந்த நிலையில், கற்கால கருவிகள் கண்டறியப்பட்டது மேலும், வலு சேர்ப்பதாக உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.