பதிவு செய்த நாள்
13
ஜூலை
2023
10:07
தஞ்சாவூர்: திருவையாறு ஐயாறப்பர் கோவிலில், ஆடிப்பூர பெருவிழா கொடி ஏற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில், அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோவில் அமைந்துள்ளது. திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதினம் மடத்திற்கு சொந்தமான இந்த ஆலயத்தில் ஆடிப்பூர பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதனை முன்னிட்டு அம்மன் சன்னதி முன்பு நந்தி பகவான் உருவம் வரையப்பட்ட பிரம்மாண்ட கொடிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, அலங்கார தீபங்கள், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன. பின்னர் மங்கள வாத்யங்கள் முழங்க மூலவர் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடி மரத்திற்கு கொடி கொண்டுவரப்பட்டது. விநாயகர், சண்டிகேஸ்வரர், அம்மன் ஆகிய உற்சவ மூர்த்திகள் தனித்தனி சப்பரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார்கள். இதனை தொடர்ந்து. கொடி மரத்திற்கு விபூதி, திரவியம் பொடி, மஞ்சள்பொடி. இளநீர், தேன், பஞ்சாமிர்தம், பால். தயிர். சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, கொடி ஏற்றப்பட்டன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஆடிப்பூர பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வரும் 21ம் தேதி நடைபெறுகிறது. விழாவின் ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் 27 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகின்றனர்.