பழநி: முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடான, பழநி திருஆவினன்குடி கோயிலில், கும்பாபிஷேக பணிகள் நடந்து வருகிறது.ரூபாய் 90 லட்சம் செலவில் கும்பாபிஷேக பணிகள், கடந்த ஆடி அமாவாசையில் சிறப்பு பூஜை செய்து துவக்கப்பட்டது. முதல் கட்டப் பணியாக, கோபுரங்களை புதுப்பிக்கும் பணி நடக்கிறது. சேதமடைந்துள்ள கோபுரங்களில் உள்ள சுதைகளை புதுப்பித்து, வர்ணம் பூசப்படுகிறது. மயில் மண்டபம் (வெளிப்பிரகாரம்) சுற்றி, சுமார் 16 லட்ச ரூபாய் செலவில் கிரைணட் கற்கள் பதிக்கப்படுகிறது. கோயில் கோபுரத்தின் மேல்தளத்தில் சுமார் 6 லட்ச ரூபாய் செலவில் தட்டோடு பதிக்கப்படுகிறது. சனீஸ்வரர் சன்னதி மேல் கோபுரம் மிகவும் சிதைந்துள்ளதால், புதிதாக சுதைகளுடன் கோபுரம் கட்டப்பட உள்ளது. அனைத்து மண்டபங்களிலும் உள்ள ஓவியங்கள், சிலைகள் சுமார் 40 லட்ச ரூபாய் செலவில் வர்ணம் பூசப்படுகிறது.கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில் கும்பாபிஷேக பணிகளை வரும் தைப்பூசத்திற்கு முன்னதாக முடிக்க உள்ளோம், என்றார்.