தீர்த்த தொட்டியில் சுகாதாரகேடு; மாசடைந்த தீர்த்த சுனை நீரால் சிரமப்படும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2023 05:07
போடி: போடி அருகே தீர்த்த தொட்டி ஆறுமுக நாயனார் கோயில் வளாகப் பகுதியில் பராமரிப்பின்றி சுகாதார வளாகம், மாசடைந்த தீர்த்த தொட்டி சுனை நீரால் பக்தர்கள் பல்வேறு வகையில் சிரமம் அடைந்து வருகின்றனர்.
போடி ஒன்றியம், கோடங்கிபட்டி ஊராட்சி உட்பட்ட போடி - தேனி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது தீர்த்த தொட்டி ஆறுமுக நாயனார் கோயில். ஆண்டு தோறும் சித்திரை முதல் தேதியில் திருவிழா நடக்கும். எப்போதும் வற்றாத நிலையில் மூலிகை கலந்த சுனை நீர் வரும் வகையில் தொட்டி அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுனை நீரில் நீராடுவர். இதோடு முருகன், ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் மாலை அணிய நீராடி செல்வதற்கு புனித இடம் ஆகும். சுனை நீர் அமைந்துள்ள தொட்டி பகுதியில் மண் கழிவுகள், தண்ணீர் மாசடைந்து கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் பக்தர்கள் நீராட சிரமமடைந்த நிலையில் சுகாதார கேடும் ஏற்பட்டுள்ளது. ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே சுகாதார வளாகம், உடைமாற்றும் அறைக்கான கட்டடம் கட்டப்பட்டும் உரிய பராமரிப்பு, தண்ணீர் வசதியின்றி சுகாதாரமற்ற நிலையில் உள்ளன. நீராடி வரும் பெண் பக்தர்கள் உடை மாற்ற முடியாமல் பல்வேறு வகையில் சிரமம் அடைந்து வருகின்றனர். சுனை நீர் தொட்டியை சுத்தப்படுத்தி கழிவுநீரை வெளியேற்றிடவும், சுகாதார வளாகத்தை பராமரிப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர கோயில் அறநிலைத் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.