ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் தேரோட்டம் வீதிஉலா வந்தது.
ராமேஸ்வரம் கோயிலில் ஜூலை 13ல் கொடி ஏற்றத்துடன் ஆடித் திருக்கல்யாணம் விழா துவங்கியது. நேற்று 9ம் நாள் விழா யொட்டி காலை 10:30 மணிக்கு கோயிலில் இருந்து பர்வதவர்த்தினி அம்மன் புறப்பாடாகி, அலங்கரிக்கப்பட்ட ஆடித் திருத்தேரில் எழுந்தருளினார். பின் அம்மனுக்கு கோயில் குருக்கள் மகா தீபாராதனை நடந்தது. இதில் கோயில் இணை ஆணையர் மாரியப்பன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், பேஸ்கார் கமலநாதன், பா.ஜ., மாவட்ட பார்வையாளர் முரளிதரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமு, ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் பிரபாகரன், யாத்திரை பணியாளர் சங்க தலைவர் பாஸ்கரன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின் பக்தர்கள் தேரின் வடத்தை இழுத்து கோயில் ரதவீதியில் வலம் வந்தனர்.