பதிவு செய்த நாள்
22
ஜூலை
2023
10:07
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டத்தில் கோவிந்தா, கோபாலா கோஷம் விண்ணத்திர முழங்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் ஆண்டாள் தேர் மிதந்து வந்தது
ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா கடந்த 14ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஐந்து கருடசேவை, சயனசேவை என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த நிலையில் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூரத் தேரோட்டம் இன்று காலை நடந்தது. அதிகாலை ஏகாந்த திருமஞ்சனம் முடிந்து, ஸ்ரீரங்கம் பெருமாள் கோயில் மற்றும் மதுரை கள்ளழகர் கோயிலில் இருந்து ஆண்டாள் ரங்கமன்னாருக்கு கொண்டுவரப்பட்ட பரிவட்டம், புடவை, மாலைகள் சாற்றப்பட்டு பிரம்ம முகூர்த்தத்தில் தேரில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தளினர். அங்கு கோயில் பட்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். இதனையடுத்து தேரின் முன்பு சிதறு தேங்காய் உடைத்து, காலை 8:02 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதனை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் வசந்தி, சிவகாசி மேயர் சங்கீதா, எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் சீனிவாசன், ஸ்ரீவில்லிபுத்தூர் மான்ராஜ், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், கலெக்டர் ஜெயசீலன், தக்கார் ரவிச்சந்திரன், அறநிலையத்துறை இணை ஆணையர்கள் செல்லத்துரை, பழனிக்குமார், நகர்மன்ற தலைவர் ரவிக்கண்ணன் ஒன்றிய குழு தலைவர் ஆறுமுகம், டி. ஐ. ஜி பொன்னி மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் துவக்கி வைத்தனர் . பல்லாயிரக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் வடத்தினை தங்கள் தோளில் தாங்கி தேரினை இழுத்தனர். நான்கு ரத வீதிகளிலும் தங்கு தடையின்றி வந்த தேர் இரண்டு கால் மணி நேரத்தில் அதாவது காலை 10: 16 மணிக்கு நிலையை வந்தடைந்தது. அப்போது கோவிந்தா, கோபாலா கோசத்துடன் பக்தர்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர். விருதுநகர் எஸ்.பி சீனிவாச பெருமாள் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. வருவாய்த்துறை, மின் வாரியம், தீயணைப்பு மருத்துவம், , நெடுஞ்சாலை உட்பட பல்வேறு அரசுத் துறையினர் தேரினை பின் தொடர்ந்து கண்காணித்தனர்.