பதிவு செய்த நாள்
22
ஜூலை
2023
01:07
மயிலாடுதுறை: ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு, மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் உள்ள ஆடிப்பூர அம்மனுக்கு மங்கள பொருட்களை வைத்து படையலிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 5008 வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்த ஆடிப்பூர அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் சமயக்குரவர்களால் பாடல்பெற்ற மாயூரநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அமைந்துள்ள ஆடிப்பூர அம்மனுக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு, இன்று சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, முறத்தில், கண்ணாடி, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, வளையல் ஆகிய மங்கள பொருட்களை வைத்து படையலிட்டு அம்மனுக்கு பூரம் கழிக்கும் வழிபாடு நடைபெற்றது. அம்மனுக்கு மஹாதீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து ஆடிப்பூர அம்மனுக்கு 5008 வளையல்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு முறத்தில் ரவிக்கை, துண்டு, கண்ணாடி, சீப்பு, வளையல்கள், அம்மனுக்கு படையலிட்ட முளைகட்டிய பயறு ஆகியன பிரசாதமாக வழங்கப்பட்டது.