காக்கை சகுனம் பார்த்து குச்சனூர் சனீஸ்வரன் கோயிலில் ஆடிப் பெருவிழா கொடியேற்றப்பட்டது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2023 01:07
சின்னமனூர்; குச்சனுார் சனீஸ்வர பகவான் கோயில் ஆடிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று காலை சனீஸ்வர பகவானின் வாகனமான காக்கை வருகையை பார்த்து கொடியேற்றம் நடைபெற்றது.
தமிழகத்தில் சனீஸ்வர பகவானுக்கென்று தனி கோயில் குச்சனூரில் மட்டுமே உள்ளது. சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் இவருக்குள் ஐக்கியம் என்பதால், இங்கு மூலவர் ஆறு கண்களுடன் உள்ளார். சனீஸ்வர பகவான் இரகு வம்சத்தில் பிறந்தவர் என்பதால், நெற்றியில் திருநாமம் தரித்தும், ஈஸ்வர பட்டம் பெற்றவர்களில் சிவபெருமானுக்கு அடுத்து சனீஸ்வர பகவான் திகழ்வதால் கிரீடத்தில் விபூதி பட்டையும் அணிந்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையும் இங்கு பெருந்திருவிழா நடைபெறும். இந்தாண்டு விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இனி வரும் நான்கு சனிக்கிழமைகளில் திருவிழா நடைபெறும். ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவார்கள். ஒவ்வொரு சனிக்கிழமை நடந்தாலும், மூன்றாவது சனி பெருந்திருவிழாவாக கொண்டாடப்படும். இந்த திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று காலை 11.36 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மூலவருக்கு அருகில் உற்சவர் இருப்பதால் அவருக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சனீஸ்வர பகவானின் வாகனமான காக்கை வருகையை எதிர்பார்த்து காத்திருந்தனர். காக்கை வந்ததை தொடர்ந்து கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் மூன்றாவது வாரம் அதாவது வரும் ஆக. 5 ல் பெருந்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அன்றையதினம் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பகவானை தரிசிக்க திரள்வார்கள். ஆடி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என்பதால், போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.