பதிவு செய்த நாள்
22
ஜூலை
2023
03:07
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், ஆண்டாளுக்கு ஆடிப்பூர வைபவம் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
கோவை மாவட்டத்தில், வைணவ ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். இங்கு பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளுக்கு, ஆடிப்பூர வைபவம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலையில் அரங்கநாதர் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், கால சந்தி பூஜை நடைபெற்றது. ஆண்டாள் சன்னதியில் புண்ணியா வசனம், கலச ஆவாகனம், பஞ்ச சுக்த ஜபம், மூலவர் மற்றும் உற்சவருக்கு ஸ்தபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. அடுத்து நெய், தேன், பால், தயிர் உள்பட திரவியங்களில் ஏகாந்தம் நடந்தது. பின்பு பட்டுப் புடவை உடுத்தி, வெள்ளி சிம்மாசனத்தில் வெண்பட்டு குடை சூழ, மேல வாத்தியுடன் ரங்க மண்டபத்திலேயே, திருமால் முன் ஆண்டாள் எழுந்தருளினார். அங்கு பெருமாளிடம் இருந்து மாலை, சடாரி மரியாதை செய்யப்பட்டது. கோவில் ஸ்தலத்தார்கள் தமிழ் வேதமாகிய திவ்ய பிரபந்தத்தில் ஆண்டாள் இயற்றிய, நாச்சியார் திருமொழி பாசுரங்களை சேவித்தனர். அதைத் தொடர்ந்து சூடிக்கொடுத்த சுடர்கொடி என்னும் சொல்லுக்கு இணங்க, ஆண்டாள் தாயாருக்கு சாத்திருந்த மாலையை, பெருமாள் அரங்கநாதருக்கு அணிவிக்கப்பட்டது. மீண்டும் கோவில் வளாகத்தில் வளம் வந்து, ஆண்டாள் சன்னதியை அடைந்தார். உச்சிக்கால பூஜை சாற்று முறை சேவித்த பின், மங்கள ஆரத்தியுடன் வைபவம் பூர்த்தி அடைந்தது. பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம், வளையல், மஞ்சள், குங்குமம் ஆகியவை வழங்கப்பட்டன. இந்த வைபவத்தில் அர்ச்சகர்கள், மிராசுதாரர்கள், கோவில் அலுவலர்கள், ஸ்ரீ பாதம் தாங்கிகள், பக்தர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.