வேலங்குளம் லெட்சுமி நாராயணர் பெருமாள் கோவிலில் ஆடிப்பூரம், பஞ்சமி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2023 03:07
மானாமதுரை: மானாமதுரை வேலூர் அருகே உள்ள வேலங்குளம் லெட்சுமி நாராயணர் பெருமாள் கோவிலில் மண்டல பூஜை விழா, ஆடிப்பூரம், பஞ்சமி பூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மானாமதுரை வேலூர் அருகே உள்ள வேலங்குளத்தில் 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு சேதமடைந்து கிடந்த லெட்சுமி நாராயணர் பெருமாள் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற மண்டல பூஜை விழாவிற்காக அதிகாலை சுவாமிகளுக்கு பால்,பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 11 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு ஹோமங்கள் வளர்க்கப்பட்டு புனித நீர் அடங்கிய கடங்களை வைத்து அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் செய்து புனித நீரை கொண்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து வாராகி அம்மன், கருடாழ்வார் மற்ற பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அன்னதானம் நடைபெற்றது. விழாவில் வேலூர், வேலங்குளம், கள்ளர்குளம், பெரிய கோட்டை, தெக்கூர், ஒத்த வீடு உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி உயர் நீதிமன்ற வக்கீல் கோவிந்தன் மற்றும் மீனா செய்திருந்தனர்.