அருணாசலேஸ்வரர் கோவிலில் தொடரும் கட்டண கொள்ளைக்கு பக்தர்கள் எதிர்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2023 11:07
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கட்டண தரிசன கொள்ளை நடத்த பல்வேறு வகையில் முயற்சி செய்யும் நடவடிக்கைக்கு, பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கட்டண தரிசன டிக்கெட் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்கின்றனர். வார விடுமுறை நாட்கள், விழா காலங்களில் வழக்கமான பக்தர்கள் கூட்டத்தை விட பல மடங்கு பக்தர் வருகின்றனர். இவர்கள் இலவச தரிசனம் மற்றும் 50 ரூபாய் கட்டண தரிசனத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். ஒரு மாதத்திற்கு முன், விரைவு தரிசனம் செய்ய, 300 ரூபாய் இடை நிறுத்த கட்டண தரிசன டிக்கெட் மூலம் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் எதிர்ப்பு எழுந்ததால் கட்டணம் நீக்கப்பட்டது. நேற்று மாலை பக்தர்கள் விரைவாக சுவாமி தரிசனம் செய்ய, 500 ரூபாய் காணிக்கை கட்டணம் என மறைமுகமாக வசூலித்தனர். பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தற்காலிகமாக கோவில் நிர்வாகம் நிறுத்தியது. கோவிலில் தொடர்ந்து மறைமுகமாக பக்தர்களிடையே கட்டண தரிசன கொள்ளை நடத்த முயலும் நடவடிக்கைக்கு, பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.