பதிவு செய்த நாள்
24
ஜூலை
2023
05:07
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவிலில் பரிவார சன்னதிகளுக்கு பாலாலயம் நடைபெற்றது.
கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதாக விளங்கும் அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவிலில்,பரிவார சன்னதி விமானங்களுக்கு பாலாலயம், நடைபெற்றது. முன்னதாக,அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில்,மஹா கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் தொடங்கி,கருணாம்பிகை அம்மன் சந்நதியின் ஐந்து நிலை ராஜகோபுரம் மராமத்து பராமரிப்பு பணிகளில் வண்ணம் தீட்டும் வேலை நடைபெற்று வருகின்றது. அதனை தொடர்ந்து, நேற்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள திருக்கல்யாண சபா மண்டபத்தில் விக்னேஸ்வரர் பூஜை, புண்யாஹ வாசனம், வாஸ்து சாந்தி, பஞ்சகவ்யம், கலாகர்சனம், மூல மந்திர ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றது. இதில்,செல்வவிநாயகர், வீரபத்ரர், பாதிரி மரத்து அம்மன், சிவசூரியன், தட்சிணாமூர்த்தி,கன்னிமூல கணபதி,சகஸ்ர லிங்கம், பஞ்சபூதலிங்கம், மகாலட்சுமி, செந்தில் ஆண்டவர், சண்டிகேஸ்வரர்,காலபைரவர், நடராஜர், பாலதண்டாயுதபாணி, நிருதிதி விநாயகர், சண்டிகேஸ்வரி,துர்க்கை அம்மன் ஆகிய சன்னதிகளின் பரிவார விமானங்களுக்கு பாலாலய செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. ஹிந்து சமய அறநிலையத்துறை ஏற்பாட்டில், கௌமார மடாலயம் கோவை சிரவையாதினம் குமரகுருபர சுவாமி, அவிநாசி திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலய ஆதீனம் காமாட்சி தாச சுவாமி, அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல்,அறங்காவலர்கள் கார்த்திகா,பொன்னுச்சாமி,ரவி பிரகாஷ், ஆறுமுகம் மற்றும் கோவில் செயல் அலுவலர் பெரிய மருது பாண்டி, உபயதாரர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.