மந்தகருப்பண்ண சுவாமி கோயிலில் பெண்கள் முளைப்பாரி நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2023 11:07
மயிலாடுதுறை; சீர்காழி அருகே மந்தகருப்பண்ண சுவாமி கோயிலில் திரளான பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் பழமையான மந்தக்கருப்பண்ண சுவாமி, காளியம்மன் மற்றும் ஏழைக்காத்தம்மன் கோயில் அமைந்துள்ளது. பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் ஆண்டு தோறும் அடி மாதம் ஆண்டுத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு இக்கோவில் திருவிழா கடந்த 16ம் தேதி பந்தகால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து ஒரு வார காலம் வீடுகளில் விரதம் இருந்து முளைப்பாரி வளர்க்கப்பட்டு, செவ்வாய் இரவு கடற்கரையில் இருந்து கரகம் எடுத்துவரப்பட்டது. அதனையடுத்து வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரியை பக்தர்கள் மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க கோலாட்டத்துடன் கோயிலுக்கு எடுத்து வந்து, கும்மியடித்து குலவை இட்டு வழிபாடு செய்தனர். தொடர்ந்து புதன் மாலை கோயிலில் இருந்து பெரிய கரகத்தை எடுத்து செல்ல, தொடர்ந்து விரதமிருந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் முளைப்பாரியை எடுத்துக் கொண்டு கடற்கரைக்கு சென்று, அங்கு சிறப்பு பூஜைகள் முடிவடைந்த பின்னர், அனைவரும் தாங்கள் எடுத்து வந்த முளைப்பாரிகளை ஆற்றில் கரைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.