முத்துமாரி அம்மன் கோயில்களில் முளைப்பாரி உற்ஸவ விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2023 03:07
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே பஞ்சந்தாங்கி கிராமத்தில் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோயிலில் 40ம் ஆண்டு முளைப்பாரி உற்ஸவ விழா நடந்தது. கடந்த ஜூலை 16 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் இரவில் கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று இரவு 8 மணியளவில் அம்மன் கரகம் எடுத்து கிராம வீதிகளில் முளைப்பாரி ஊர்வலம் வந்தது. இன்று காலை சர்வ மலர் அலங்காரத்தில் மூலவர் முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.
* பெரியபட்டினம் அருகே கடற்கரை கிராமமான தோப்புவலசையில் மாரியம்மன் கோயிலில் 285ம் ஆண்டு முளைப்பாரி உற்ஸவ விழா நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் மூலவர் மாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. நேற்று இரவு 10 மணியளவில் கரகம், முளைப்பாரி, அக்னி சட்டி உள்ளிட்டவைகள் நேர்த்திக்கடனாக பக்தர்கள் எடுத்துச் சென்றனர். இன்று காலையில் அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
* பெரியபட்டினம் அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள காந்தாரியம்மன் கோயிலில் பூக்குழி உற்ஸவ விழா நடந்தது. மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடந்தது. நேற்று மாலை 6:00 மணியளவில் கோயில் வளாகம் முன்புறம் அக்கினி வளர்க்கப்பட்டு நேர்த்திக்கடன் பக்தர்கள் பூக்குழி இறங்கினர். இன்று பகலில் அன்னதானமும் சிறப்பு பூஜைகளும் நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.