பதிவு செய்த நாள்
27
ஜூலை
2023
10:07
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடிக்குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் நடப்பாண்டின் ஆடிகுண்டம் திருவிழா கடந்த 18 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது.அதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்வு நேற்று முன்தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ நடைபெற்றது. குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியில் விரதம் இருந்து பக்தி பரவசத்துடன் பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து நேற்று தேக்கம்பட்டி, நெல்லித்துறை,சமயபுரம்,வெல்ஸ்புரம்,கூடுதுறை மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மாவிளக்கு எடுத்தும்,அலகு குத்தியும் திருக்கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து வண்ண,வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளிய அம்மன் திருக்கோவிலை வலம் வந்து மீண்டும் நிலையை வந்து அடைந்தது.விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத்,திருக்கோவில் செயல் அலுவலரும், உதவி ஆணையருமான கைலாசமூர்த்தி சிறப்பாக செய்திருந்தனர். பூ பல்லக்கில் எழுந்தருளிய அம்மனுக்கு தலைமை பூசாரி ரகுபதி சிறப்பு பூஜைகள் செய்து துவக்கி வைத்தார். பூப்பல்லக்கு பவனி ஏற்பாடுகளை உபயதாரர் கெண்டையூர் செல்வராஜ் செய்திருந்தார். இந்நிகழ்ச்சிகளில் தேக்கம்பட்டி, நெல்லித்துறை,சமயபுரம்,வெல்ஸ்புரம்,கூடுதுறை மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து அம்மனை தரிசனம் செய்து அருளாசி பெற்றுச் சென்றனர்.