பதிவு செய்த நாள்
09
அக்
2012
10:10
கீழக்கரை: ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில், தேசிய ஒருமைப்பாட்டு சந்தனக்கூடு விழா, அக்.,9 ல் நடைபெறுவதையொட்டி, நேற்று முதல் பக்தர்கள் வரத்துவங்கினர். ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பாதுஷா நாயகம் சந்தனக்கூடு விழா, கடந்த செப்., 17ல், மவ்லுது (புகழ்மாலை) ஓதப்பட்டு துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, தர்காவில் மின் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை நான்கு மணிக்கு யானை,குதிரை, தாரை, தப்பட்டையுடன் ஊர்வலமாக சென்று, தைக்காவில் இருந்து போர்வை எடுக்கும் விழா நடைபெறும். அதிகாலை 3 மணிக்கு, ஏர்வாடி முஜிபிர் நல்ல இபுறாகிம் தர்காவில் இருந்து சந்தனக்குடம் எடுத்து, அலங்கார ரதத்துடன் சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு, காலை ஐந்து மணிக்கு தர்கா வந்தடையும்.தர்காவை மூன்று முறை வலம் வந்த பின், சிறப்பு பிரார்த்தனையும், தொடர்ந்து தர்காவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடைபெறும். ராமநாதபுரத்திலிருந்து ஏர்வாடி தர்காவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் பாதுஷா நாயகம்: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி, 12ம் நூற்றாண்டில் "பவுத்திர மாணிக்க பட்டினம் என்ற பெயரை தாங்கி ரத்தினங்களில் மாணிக்கமாக விளங்கியது. அதன்பின் யர்பாத் என பெயர் மாற்றம் பெற்றது. நாளடைவில் "ஏர்வாடி என மருவி இன்றும் அதே பெயர் நிலைத்திருக்கிறது.இங்குள்ள பாதுஷா நாயகம் தர்ஹா, தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும் வாய்ந்தது. இதன் காரணமாக மாந்த்ரீகத்தாலும், சூனியத்தாலும் பாதிக்கப்பட்ட பலர், ஆயிரக்கணக்கான ரூபாயை டாக்டர்களிடம் சிகிச்சைக்காக அள்ளிக் கொடுத்தும் குணமாகாத நிலையில் இறுதியாக ஏர்வாடி தர்காவிற்கு வருகின்றனர். தர்காவில் சில நாட்கள் தங்கி பிரார்த்தனை செய்கின்றனர். சில தினங்களில் நோய் முற்றிலும் நீங்கி குணவாளர்களாக வீடு திரும்புகின்றனர். இந்த தர்காவின் மகிமையை அறிந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் அனைத்து சமூக மக்களும் வந்து செல்கின்றனர். இதில் கேரள மக்கள் அதிகமானோர் தங்கி பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர்.மன்னர் முத்துக்குமார விஜய ரகுநாத சேதுபதியின் வேண்டுதலை நிறைவேற்றிய பாதுஷா நாயகத்தின் மகிமையை வியந்து, பாதுஷா நாயகத்தின் பேரனார் நல்ல இபுறாகிமிடம் 6,000த்திற்கும் அதிகமான நஞ்சை, புஞ்சை நிலங்களைக் கொண்ட ஏர்வாடி கிராமத்தை இனாமாக எழுதிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.ஏர்வாடி சந்தனக்கூடு உருவாக்குவதில் அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்பதால் ஆண்டுதோறும் தேசிய ஒருமைப்பாட்டு மதநல்லிணக்க விழாவாக கொண்டாடி வருகின்றனர். மவுலீது ஓதப்பட்டு துவங்கப்படும் இந்த விழா கொடியேற்றம்,சந்தனக்கூடு, கொடியிறக்கத்துடன் நிறைவு பெறுகிறது. இந் நிகழ்ச்சி முடிந்ததும் ஆயிரக்கணக்கணக்கான கிலோ அரிசியில் தயாரிக்கபட்ட நெய் சாதத்தை பிரசாதமாகவாங்கி செல்கின்றனர். ஏர்வாடி தர்கா அலங்கார வாசலை கடந்ததும் எதிரில் தென்படுவது பாதுஷா நாயகம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இடம். இங்கு தான் குத்பு சுல்த்தான் ஸய்யீது இபுராஹிம் ஷகீது ஒலியுல்லாஹ் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார். கிழக்கே அவரது திருப்பேரர் நல்ல இபுராகிம் பாதுஷா தர்கா உள்ளது. தலைமாட்டு பகுதியின் வடக்கே பாதுஷா நாயகத்துடன் உடன் வந்த டாக்டர்கள் சம்சுதீன், கமருதீன், நூர்தீன் ஆகியோர் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாதுஷா நாயகம் ஜீவியமாக இருந்து தர்காவிற்கு வரும் யாத்ரீகர்களுக்கு அருள் வழங்கி வருகிறார்.