நாகர்கோவில் நாகராஜா கோயிலில் நாகருக்கு பால் ஊற்றி பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஆக 2023 04:08
நாகர்கோவில் : நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஆவணி ஞாயிறு விழாவை ஒட்டி பெண்கள், நாகருக்கு பால் ஊற்றி வழிபாடு நடத்தினர். நாகரை மூலவராகக் கொண்டு நாகர்கோவிலில் அமைந்துள்ளது நாகராஜா கோவில். இந்த பெயரில் தான் நாகர்கோவில் ஊர் பெயரும் அமைந்துள்ளது. கோவில் பெரிதாக இருந்தாலும் நாகர் பிரதிஷ்டை இன்னும் ஓலைக்கூரையில் தான் அமைந்துள்ளது. இங்குள்ள புற்றில் இருந்து வரும் மண், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இப்படி சிறப்பு பெற்ற நாகராஜா கோவிலில் ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமை விசேஷ தினமாகும். இந்த நாளில் நாகருக்கு பால் அபிஷேகம் நடத்தினால், ராகு-கேது தோஷம் நீங்கும், திருமண தடை நீங்கும், திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த ஆண்டு முதல் ஆவணி ஞாயிறு நாளில், அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் கோவிலில் அலை மோதியது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்கள் நீண்ட வரிசையில் நின்று நாகருக்கு பாலபிஷேகம் நடத்தி வழிபாடு நடத்தினர். இந்த நாளில் நாகருக்கு பால் ஊற்றி வழிபாடு நடத்தினால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.