முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் ரோப்கார் அமைக்க சர்வே பணிகள் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஆக 2023 06:08
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை மேல் ரோப்கார் அமைக்க மலைக்கு பின்புறம் மலை அடிவாரத்தில் சர்வே பணிகள் நேற்று துவங்கியது.
முருகப்பெருமானின் முதல் படை வீடு எனும் சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் மூலவர் திருமண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். உள்ளூர், வெளியூர்களில் இருந்து தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். தவிர அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருமணம் செய்து கொள்ள வருகின்றனர். பவர்ணமி தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வருகின்றனர். இங்குள்ள மலை மேல் காசி விஸ்வநாதர் கோயில், சுனை தீர்த்தம் உள்ளது. காசி விசுவநாதரை தரிசனம் செய்வதற்கு முதியோர், மாற்றுத்திறனாளிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. குன்றத்து மலை மேல் ரோப் கார் அமைக்க எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா சட்டசபையில் கோரிக்கை விடுத்தார். அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மதுரை வந்த பொழுது திருப்பரங்குன்றம் மலையில் ரோப் கார் சேவைக்கான சாத்திய கூறுகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். முதல் கட்டமாக சில தினங்களுக்கு முன்பு கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் மலை மேல் ரோப்கார் அமைப்பது சம்பந்தமாக கருத்து கேட்பு நடைபெற்றது. அனைத்து பக்தர்களும் கட்டாயம் அமைக்க வேண்டும் என தெரிவித்தனர். மலைக்குப் பின்புறம் மலை அடிவாரத்தில் ரோப்கார் அமைப்பதற்கான சர்வே பணிகளை சென்னை ஐடி காட் நிறுவனத்தினர் இன்று துவக்கினர்.