பழநி முருகன் கோயிலில் தமிழக கவர்னர் ரவி சுவாமி தரிசனம்; தங்கரதம் இழுத்து நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஆக 2023 11:08
பழநி: பழநி முருகன் கோயிலில் தமிழக கவர்னர் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.
பழநி முருகன் கோயிலில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார். பழநி பஸ்ஸ்டாண்ட் அருகே மயில் ரவுண்டான பகுதியில் பா.ஜ.வினர் தேசிய கொடி ஏந்தி வரவேற்றனர். பழநி கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி நிலையத்திற்கு மாலை 5:45க்கு வருகை புரிந்தார். அங்கு கலெக்டர் பூங்கொடி, பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி, அபிநவ்குமார், ஏ.டி.எஸ்.பி., வெள்ளைச்சாமி திண்டுக்கல் எஸ்.பி., பாஸ்கரன், மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர். போலிசார் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.
மாலை 6:15க்கு புறப்பட்டு முருகன் கோயிலுக்கு வின்ச் வழியாக மேலே சென்றார். கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து மேளதாளத்துடன் வரவேற்றார். சுவாமி தரிசனத்திற்கு பின் பிரசாதம் வழங்கப்பட்டது. போகர் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார். அங்கு புலிப்பாணி ஆசிரமம் சார்பில் போகர் திருவுருவ படத்துடன் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மலைக்கோவிலில் தங்கரதம் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார். அதன்பின் வின்ச் வழியாக கீழிறங்கி தண்டபாணி நிலையம் இரவு 7:20க்கு வந்தார். இரவு 7:30 மணிக்கு புறப்பட்டு சாலை மார்க்கமாக கோவை திரும்பி சென்றார். தமிழக கவர்னர் வருகையை முன்னிட்டு அவசரகதியில் சாலைகள் சீரமைக்கப்பட்டது. கவர்னர் வரும் சாலையில் இருந்த ஸ்பீடு பிரேக்கர்கள் அகற்றப்பட்டன. திண்டுக்கல், தேனி பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.