பணக்காரர் ஒருவரின் தோப்புக்கு பணியாளர் தேவைப்பட்டார். ஒருநாள் இப்ராகிம் என்ற ஞானி அவரை வேறொரு விஷயமாகக் காண வந்தார். இப்ராகிமை பணக்காரருக்கு இன்னார் என்பது தெரியாது. அவரது எளிய தோற்றம் கண்டு பணியாளாக சேர தயாரா எனக் கேட்டார். இதுவும் இறைவனின் விருப்பம் எனக் கருதி இப்ராகிம் ஒப்புக்கொண்டார். ஒருநாள் பணக்காரரை பார்க்க அவரது நண்பர்கள் சிலர் வந்தனர். அவர்களுக்கு மாம்பழம் பறிக்கும்படி பணக்காரர் உத்தரவிட, இப்ராகிமும் பறித்தார்.. அவற்றை சாப்பிட்ட நண்பர்கள் பழங்கள் புளித்ததால் முகம் சுளித்தனர். “இத்தனை நாளாக வேலை செய்தும் எந்த மரத்தின் பழம் இனிக்கும் என உமக்குத் தெரியாதா?” என கோபித்தார் பணக்காரர். “ஐயா! காவல் பணியைத் தான் என்னிடம் ஒப்படைத்தீர்கள். பழங்களை சாப்பிடுவதற்கு தாங்கள் அனுமதியளிக்கவில்லை’’ என்றார். இப்ராகிமின் நேர்மையைக் கண்ட பணக்காரர் வியந்தார்.