பதிவு செய்த நாள்
12
அக்
2012
10:10
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கு பெறுவதற்காக, சுசீந்திரத்தில் இருந்து, முன்னுதித்த நங்கை தேவி ஊர்வலமாக புறப்பட்டார். அப்போது தமிழகம் மற்றும் கேரள போலீசார் அணிவகுப்பு மரியாதை நடத்தினர். கேரளா, தமிழகத்துடன் இணைந்திருந்த காலத்தில் திருவிதாங்கூர் ராஜியத்தின் தலைநகராக விளங்கிய பத்மனாபபுரத்தில், நவராத்திரி விழா நடைபெற்றது. 1840 ம் ஆண்டு, சுவாதி திருநாள் மன்னர் காலத்தில் நிர்வாக வசதிக்காக தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. அதன்பின், நவராத்திரி விழாவுக்கு பத்மனாபபுரம் தேவாரகெட்டு சரஸ்வதி அம்மன், வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை விக்ரகங்கள் ஊர்வலமாக திருவனந்தபுரம் எடுத்து செல்லப்பட்டது. இந்த ஆண்டு நவராத்திரி விழா வரும் அக்.,15 ல் துவங்குகிறது. இதற்காக, இன்று பத்மனாபபுரம் அரண்மனையில் இருந்து சுவாமி ஊர்வலம் புறப்படுகிறது. இதில் பங்கேற்பதற்காக, நேற்று காலை சுசீந்திரத்திலிருந்து முன்னுதித்தநங்கை விக்ரகம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அப்போது கேரள போலீசாரின் பேன்ட் வாத்யம் முழங்கப்பட்டது. கேரள- தமிழக போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். இந்த ஊர்வலம் நேற்றிரவு வேளிமலை குமாரகோவில் வந்தது. இன்று காலை பத்மனாபபுரம் அரண்மனையில் இருந்து நவராத்திரி ஊர்வலம் புறப்பட்டு, அக்.,14 ல், திருவனந்தபுரம் சென்றடைகிறது.