திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம் இன்று (செப். 13ம் தேதி) கோலாகலமாக நடைபெற்றது.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித்திருவிழா கடந்த 4ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்மன் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா நடந்தது. 9ம் திருவிழாவான நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. பகலில் சிவன் கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கபெருமானும், அலைவாயுகந்த பெருமானும் தனித்தனி வெள்ளி குதிரை வாகனத்தில் எழுதருளி வீதி உலா வந்து நெல்லை ரோட்டில் உள்ள வேட்டை வெளிமண்டபத்தில் திருக்கண் சாத்திய பின் மீண்டும் காமராஜர் சாலை, உள்மாட வீதி வழியாக சிவன் கோயில் சேர்ந்தனர். இரவு சன்னதி தெருவில் உள்ள பூச்சிக்காடு அருணாசலத்தேவர் வகையறா மண்டபத்தில் இருந்து சுவாமி தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி தேர் கடாட்சம் அருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (13ம்தேதி) காலை 6 மணிக்கு துவங்கியது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கோஷத்துடன் விநாயகர், சுவாமி, அம்மன் தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இரவு சுவாமி, அம்மன் பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து சிவன் கோயில் சேர்கிறார்கள். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் அறங்காவலர்கள் அனிதா குமரன் கணேசன் ராமதாஸ் செந்தில் முருகன் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.