காசியில் சைவ ஆகம கருத்தரங்கு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15செப் 2023 10:09
திருப்பூர்: புனித சாதுர்மாஸ்ய விரதத்தின் ஒரு பகுதியாக சைவ ஆகமங்கள் குறித்த சிறப்பு கருத்தரங்கு மற்றும் ருத்ரஹோம வழிபாடு காசியில் நடைபெற்றது.
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காசியில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு வருகிறார். விழாவின் ஒரு பகுதியாக சைவ ஆகமங்கள் குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. வாரணாசியில் உள்ள மகாராஜா சேட்சிங் கோட்டை வளாகத்தில் கருத்தரங்கு நடந்தது. ஸ்ரீ காமகோடிஸ்வரர் கோவில் சைவ மத நூல்களின் மங்கள பூஜையுடன் 28 சைவ ஆகம நூல்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. கோட்டையில் தேசியக்கொடி மற்றும் நந்திக்கொடி ஏற்றப்பட்டது. பெங்களூரு ஸ்ரீ குருகுலம் மாணவர்களால் உருவாக்கப்பட்ட யாகசாலை கும்பாபிஷேகம் திருவிழா மற்றும் தினசரி வழிபாடு தொடர்புடைய சைவ ஆகம கண்காட்சியை ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திறந்து வைத்து கண்காட்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். காசி ஸ்ரீ விஸ்வநாதர் சுவாமி கோவில் அறங்காவலர் வெங்கட்ரமண கனகபாடிகள் மகேஷ் சர்மா ராகவேந்திர சர்மா ஆகியோர் வேதகோஷம் ஆகம பாராயணத்துடன் விழா தொடங்கியது. ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சைவாகமத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தும் வகையில் அருளாசி வழங்கினார். காஞ்சி காமகோடி பீட வியாசபாரத கலாதி சதஸ் சமாஜம் சேவைகளையும் ஸ்ரீ குருகுலம் வேதாகம சமஸ்கிருத மகா பாடசாலையின் ஆகம சேவைகளையும் பாராட்டினார். கருத்தரங்கின் முதல் அமர்வில் கூனம்பட்டி திருமடம் ஸ்ரீநடராஜ சுவாமி திருச்செங்கோடு ராஜப்பா சிவாச்சாரியார் அறிமுக உரையாற்றினர். இரண்டாவது அமர்வில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசி வழங்கினார். வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் இணையதளம் வாயிலாக பங்கேற்று பேசினார். பெங்களூர் ஸ்ரீ குருகுலம் வேத ஆகம சம்ஸ்கிருத மகா பாடசாலை முதல்வர் அவிநாசி சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் மற்றும் அவரது குழுவினரின் முயற்சிக்கும் 28 சைவாகம கிரந்த பூஜை மற்றும் யாத்திரையுடன் விழா நடத்தியதற்கு பாராட்டி கவுரவிக்கப்பட்டனர். மாலையில் கங்கை நதிக்கரையில் நாதஸ்வர சங்கு நாதம் முழங்க கங்கைக்கு ஆரத்தி பூஜைகளும் பஞ்சபூத வழிபாடும் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ ருத்ர பாராயணம் 108 கலச ஸ்தாபனம் ஏகாதச ருத்ர கலச ஸ்தாபனம் ஷடத்வ ஹோமம் செய்து காசி ஸ்ரீ விஸ்வநாதருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ சண்டி ஹோம நிகழ்ச்சியும் சக்தி யாகமும் நடைபெற்றன.