பதிவு செய்த நாள்
15
செப்
2023
12:09
தி.நகர்: ‘‘உயிரைக் கொடுத்தும், சனாதன தர்மத்தை காக்க, தமிழ்நாடு பிராமண சமாஜம் தயாராக உள்ளது,’’ என, பிராமண சமாஜ பொதுக்குழுவில், அதன் தலைவர் ஹரிஹரமுத்து அய்யர் பேசினார். தமிழ்நாடு பிராமண சமாஜத்தின் மாநில பிரதிநிதித்துவ
பொதுக்குழு கூட்டம், சமாஜ தலைவர் ஹரிஹரமுத்து அய்யர் தலைமையில், தி.நகர் சுந்தரம் தெருவிலுள்ள குருபாலாஜி திருமண மண்டபத்தில் நடந்தது. இக்கூட்டத்தில், தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில், 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவும், இதற்கான சான்றிதழை தாமதமில்லாமல் வழங்கவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக கோவில்களில் பணி செய்யும் அர்ச்சகர்களின் முன்னேற்றத்திற்காக, நலவாரியம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட, 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், தலைவர் ஹரிஹரமுத்து அய்யர் பேசியதாவது: நம் பிராமண சமாஜம், சமூக நலன் சார்ந்த அனைத்து பொது விஷயங்களுக்காக என்றும் பாடுபடும். இந்த சமாஜத்தில், 12,000 உறுப்பினர்கள் உள்ளனர். விரைவில்அனைத்து மாவட்டங்களிலும், நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடத்தப்படும். மேலும், வரும் 2025ம் ஆண்டு மிகப்பெரிய அளவில் மாநில மாநாடு நடத்தப்படும். தமிழகத்தில் சிலர், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டுமென பேசி வருகின்றனர். அதற்காக எதிர்ப்பு மாநாடும் நடத்துகின்றனர். உயிரைக் கொடுத்தும் சனாதன தர்மத்தைகாக்க, தமிழ்நாடு பிராமண சமாஜம் தயாராக உள்ளது. உலகம் உள்ளவரை, சனாதன தர்மம் நிலைத்து நிற்கும். யாராலும் எதுவும் செய்ய முடியாது. நாம் யாருக்காகவும் எதற்காகவும் பயப்பட மாட்டோம். விநாயகர் சதுர்த்தியன்று நாம் அனைவரும், நம் வீட்டில் கணபதி ஹோமம் நடத்தவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.