ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை கிரிவலப் பாதை பணிகளை விரைந்து முடிக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15செப் 2023 05:09
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி உற்சவம் செப். 23ந்தேதி முதல் துவங்க உள்ளதால், அதற்குள் கிரிவலப் பாதை பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆண்டு தோறும் இக்கோயிலில் புரட்டாசி சனிவார உற்சவம் வெகு சிறப்பாக நடப்பது வழக்கம். ஐந்து வாரம் நடக்கும் இந்த திருவிழாவில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி மாவட்டத்தின் அனைத்து நகரங்களில் இருந்தும் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, தேனி மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கண பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். அதன்படி தற்போது செப்டம்பர் 23 முதல் புரட்டாசி சனிவார உற்சவம் துவங்குகிறது. இந்நிலையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அறநிலையத்துறை சார்பில் சிவகாசி சப் கலெக்டர் விஸ்வநாதன் தலைமையில் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அனைத்து அரசு துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்நிலையில் திருவண்ணாமலையை சுற்றி ரூ.6 கோடி மதிப்பில் நடக்கும் கிரிவலப் பாதை பணியில், தற்போது ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக கோயிலின் நுழைவு பகுதியில் உள்ள பழைய ரோட்டினை தோண்டி எடுத்து புதிய ரோடு அமைக்கும் பணி நடக்க உள்ளது. இதனை விரைந்து சீரமைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். குலாலர் பஜாரில் கோயில் வரை ரோட்டில் இருபுறமும் குவிந்துள்ள மணல்களை முழு அளவில் அள்ள வேண்டும். ஊராட்சி அலுவலக மேற்புறமுள்ள சுகாதார வளாகங்களையும், கோயிலுக்கு செல்லும் பாதையில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகத்தையும் உடனடியாக பயன்பாட்டுக் கொண்டு வர வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி மக்கள் எளிதில் வந்து செல்ல வழி ஏற்படுத்தி தர வேண்டும். போதியளவிற்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.