உப்பூர் விநாயகர் கோயிலில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2023 11:09
ஆர்.எஸ்.மங்கலம்: உப்பூர் விநாயகர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் பிரசித்தி பெற்ற வெயிலுகந்த விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் செப்.10ல் கொடியேற்றத்துடன் சதிர்த்தி விழா தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் தொடர்ச்சியாக தினமும் மாலையில் பல்வேறு வாகனங்களில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. விழாவின் தொடர்ச்சியாக நேற்று முன் தினம் விநாயகருக்கு சித்தி, புத்தி ஆகிய இரு தேவியருடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு மகாரதம் எழுந்தருல்தல் நிகழ்வு நடைபெற்றது. பின்பு மாலையில் தேரோட்டம் நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேரின், தேர் வடத்தை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இழுத்து சென்று நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். பின்னர் சிம்ம வாகனத்தில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. இன்று காலை 10:00 மணிக்கு முக்கிய விழாவான சதுர்த்தி தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்று, கோவில் முன்பு பக்தர்கள் பூவில் இறங்கும் நிகழ்வு நடைபெறுவதால், விழா ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. தேரோட்ட நிகழ்வில் ஜமீன்தார் நாராயணன் செட்டியார், முன்னாள் வி.ஏ.ஓ., உப்பூர் கிருஷ்ணன், குமரையா அம்பலம் உட்பட பல கலந்து கொண்டனர்.