பதிவு செய்த நாள்
21
செப்
2023
03:09
உளுந்தூர்பேட்டை; பாதூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவில் தங்ககருட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.
உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. கடந்த 15ம் தேதி ஸ்ரீசெல்வர் மேனாவில் புறப்பாடும், அங்குரார்ப்பணம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 16ம் தேதி திருப்பல்லக்கும், ததியாராதனம், ஹம்ஸ வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. 17ம் தேதி சந்திர பிரபையும், 18ம் தேதி அனுமந்த் வாகனத்திலும், 19ம் தேதி சேஷ வாகனத்திலும் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று காலை 11 மணியளவில் திருப்பல்லக்கில் பெருமாள் நாச்சியார் திருக்கோல சேவை, விசேஷ திருமஞ்சனம் நடந்தது. அதனைத் தொடர்ந்து இரவு 10 மணியளவில் தங்கக் கருட வாகனத்தில் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை, வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இன்று காலை 8 மணியளவில் திருப்பல்லக்கும், விசேஷத் திருமஞ்சனமும், விசேஷ சாற்று முறையும் நடந்தது. நாளை (22ம் தேதி) காலை 10 மணியளவில் ஸ்ரீமத் ஆதிவண் சடகோப யதிந்திர மகா தேசிகன் திருவீதி புறப்பாடும், இரவு 10 மணியளவில் திருக்கல்யாணம், புஷ்ப பல்லாக்கில் சுவாமி வீதியுலா நடக்கிறது. 24ம் தேதி காலை 7 மணியளவில் ரதாரோஹணம், ரதோற்சவம் நடக்கிறது. 27ம் தேதி ஸ்ரீநிகமாந்த மகாதேசிகன் திருவீதியுலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.