பதிவு செய்த நாள்
15
அக்
2012
10:10
தூத்துக்குடி: குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. மைசூருக்கு அடுத்தபடியாக, இங்கு, நவராத்திரியையொட்டி, 10 நாட்கள் நடக்கும் இத்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதையொட்டி, கொடிப்பட்டம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, காலை 9 மணிக்கு மேல் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. விழாநாட்களில், தினமும், முத்தாரம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை, வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான, முத்தாரம்மன், தன்னை எதிர்த்து போரிடும் சூரனை சம்ஹாரம் செய்யும், மகிஷாசூரசம்ஹாரம், பத்தாம் நாளான, அக்.,24ம் தேதி நள்ளிரவு கோயில் கடற்கரையில் நடக்கிறது. தசராவையொட்டி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மாலையணிந்து, சுவாமி, அரக்கன், பிச்சை எடுப்பவர், நரிக்குறவர் உள்ளிட்ட பல்வேறு வேடமிட்டு, கிராமம் கிராமமாக சென்று, கலைநிகழ்ச்சிகளை நடத்தி, காணிக்கை பிரித்து கோயிலைச்சேர்ந்து, வேண்டுதலை நிறைவேற்றுவர்.