பதிவு செய்த நாள்
29
செப்
2023
12:09
சென்னை: தி.நகர் பெருமாள் கோவில் பிரமாண்டமாக விரிவாக்கம் செய்து நிர்மாணிக்கப்பட உள்ளது. இதற்காக இதுவரை, 19 கோடி ரூபாய் நன்கொடை வந்துள்ளது என, திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழகம், புதுச்சேரி ஆலோசனைக் குழு தலைவராக, ஏ.ஜெ.சேகர் மூன்றாவது முறையாக நியமிக்கப்பட்டார். அவருக்கு, சென்னை தியாகராயர் நகரில் உள்ள பெருமாள் கோவிலில், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, கருணாகர் ரெட்டி, ஏ.ஜெ.சேகர் ஆகியோர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையில் பெருமாள் கோவில் நிர்மாணப் பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு டிச., மாதம் சம்ப்ரோக்ஷணம் நடத்தப்படும். தமிழகத்தில் இருந்து திருப்பதிக்கு பல ஆண்டுகளாக, பக்தர்கள் நடைபாதையாக வந்து, பெருமாளை தரிசித்துச் செல்கின்றனர். அவர்களின் வசதிக்காக, வேலுார் - -திருப்பதி, பெரியபாளையம்- - திருப்பதி சாலையில் தங்கும் சத்திரங்கள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு, 25 கி.மீ., துாரத்திற்கும், இந்த சத்திரங்கள் அமைய உள்ளன. 200 பக்தர்கள் வரை தங்கி, சமைத்து சாப்பிடும் வசதிகளுடன் இந்த சத்திரங்கள் அமைக்கப்படுகின்றன. விரைவில் தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், இலவச திருமணம் நடத்த உள்ளோம். அது குறித்து, விரைவில் முடிவு செய்யப்படும். சென்னை, ராயப்பேட்டையில் ஒன்றரை ஏக்கரில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருமண மண்டபம் கட்டப்பட உள்ளது. அதற்கான பூமி பூஜை விரைவில் நடக்கும். தி.நகர் பெருமாள் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட உள்ளது. தற்போது, ஐந்து கிரவுண்டில் உள்ள கோவில், 11 கிரவுண்டில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இக்கோவில் கட்டுவதற்காக, 19 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆறு மாத காலத்திற்குள் பூமி பூஜை போடப்பட உள்ளது. தமிழகத்தில் தேவஸ்தானம் ஆன்மிக பணிகளை மேற்கொள்ள, முதல்வர் ஸ்டாலின் உறுதுணையாக இருந்து வருகிறார். திருப்பதி -திருமலை மலைப்பாதையில் சிறுத்தைகளை பிடிக்க, ஆங்காங்கே வலை அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில், 170 வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். குழந்தைகளுடன் வருவோர் பிற்பகல் 2:00 மணி வரையும், பெரியவர்கள் இரவு 10:00 மணி வரையும் அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு அவர்கள் கூறினர். முன்னதாக, தி.நகர் கோவில் நிர்மாணத்திற்காக, டி.வி.எச்., நிறுவனம் சார்பில், 1 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.