பதிவு செய்த நாள்
03
அக்
2023
06:10
மேட்டுப்பாளையம்: வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஏழு நிலை ராஜகோபுரம் கட்டும் பணிகள், துரிதமாக நடைபெறுகின்றன.
கோவை மாவட்டத்தில் உள்ள, அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவில். இங்கு வார நாட்களில் ஐநூறுக்கும் மேற்பட்ட பக்தர்களும், செவ்வாய் வெள்ளி மற்றும் விடுமுறை நாட்களில், இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள், கோவிலுக்கு வந்து செல்கின்றனர். கோவில் முன்பு ராஜகோபுரம் அமைக்கும்படி, பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதை அடுத்து, 2017ம் ஆண்டு, ஏழுநிலை ராஜகோபுரம், ஒன்றரை கோடி ரூபாய் செலவில், கட்டும் பணிகள் துவங்கின. ஆனால் கட்டுமான பொருள்களின் விலை ஏற்றம், ஜி.எஸ்.டி., வரி பிரச்னையால், ராஜகோபுரம் கட்டும் பணிகள், கடந்த மூன்று ஆண்டுகளாக நின்று இருந்தன. இந்நிலையில் உபயதாரர்கள், ராஜகோபுரத்தை கட்டிக் கொடுக்க, முன் வந்தனர். இதற்கு தமிழக அரசு ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், அனுமதி வழங்கினர். கடந்த ஏப்ரல் மாதம் முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக, ராஜகோபுரம் கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார். தற்போது கோபுரத்தில், கல்கார பணிகள் நடைபெறுகின்றன. இதுகுறித்து கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி, கூறியதாவது: ஏழு நிலை ராஜகோபுரப் பணிகள் பாதியில் நின்றிருந்தன. தற்போது ராஜகோபுரம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாத வரியில் துவங்கி, பலகை வரையில் முடியும் தருவாயில் உள்ளது. இதற்கு மேல் நான்கு வரிகள் கல்காரப்பணிகள் நடைபெறும். அதை அடுத்து செங்கல் வைத்து கோபுரப் பணிகள் நடைபெறும். மொத்தம், நூறேகால் (100.25) அடி உயரத்திற்கு ஏழு நிலை ராஜகோபுரம் கட்டப்பட உள்ளது. பணிகள் விரைவாக நடைபெறுவதால், குறிப்பிட்ட காலத்தில் ராஜகோபுரம் பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு உதவி கமிஷனர் கூறினார்.