பதிவு செய்த நாள்
04
அக்
2023
11:10
நிஜாமாபாத்: தமிழகத்தில் உள்ள ஹிந்து கோவில்களை தி.மு.க., அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளது. கோவில் சொத்துக்கள் மற்றும் வருமானங்களை முறைகேடாக பயன்படுத்துகிறது. இது தொடர்பாக தன் கூட்டணி கட்சியான தி.மு.க.,வை காங்கிரஸ் தட்டிக் கேட்குமா? என, பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார். சனாதன தர்மத்தை ஒழித்தாக வேண்டும் என தீர்மானத்துடன் இருக்கிறது "இந்தியா" கூட்டணி. இந்தியா கூட்டணியை சேர்ந்தவர்கள் சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என விரும்புகின்றனர். விவேகானந்தருக்கும் திலகருக்கும் உத்வேகம் தந்தது சனாதன தர்மம்தான் என்று பிரதமர் மோடி கூறினார்.
தமிழகத்தில் ஹிந்து கோவில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளது. கோவில்களின் சொத்துக்கள் மற்றும் வருமானங்களை முறைகேடாக பயன்படுத்துகிறது. எவ்வளவு மக்கள்தொகையோ அதற்கேற்ற உரிமை என்று கூறும் காங்கிரஸ், தமிழகத்தில் உள்ள தன் கூட்டணி கட்சியான தி.மு.க.,விடம், கோவில்களை ஹிந்து மக்களிடம் ஒப்படைக்கும்படி கூறுமா? சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்களை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வராதபோது, கோவில்களை மட்டும் எப்படி அரசு எடுத்துக் கொள்ள முடியும்? மக்கள்தொகைக்கு ஏற்ப உரிமை தர வேண்டும் என்று கூறும் காங்கிரஸ், கோவில்களை ஹிந்துக்களிடம் அளித்து, அவர்களுடைய உரிமையை நிலைநாட்டுமா?
நலத்திட்டங்கள்: பா.ஜ.,வை பொருத்தவரை, ஜாதி, மதம் என்ற அடிப்படையில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில்லை.எந்த ஜாதியாக இருந்தாலும், எந்த மதமாக இருந்தாலும், ஏழ்மையில் இருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்பது தான், இந்த அரசின் நோக்கமாகும். அதை செய்வதையே எங்களுடைய கடமையாக கருதுகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.