12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கோயில் திருவிழாவிற்கு அனுமதி இல்லை; 18 கிராம மக்கள் போராட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2023 11:10
உசிலம்பட்டி: எழுமலையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் முத்தாலம்மன் கோயில் திருவிழாவிற்கு அனுமதி வழங்கக்கோரி அனைத்து சமுதாய மக்களும் இணைந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
எழுமலையைச் சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த அனைத்து சமுதாய மக்கள் இணைந்து 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புரட்டாசி மாதத்தில் முத்தாலம்மன் கோயில் திருவிழா, தேரோட்டம் நடைபெறும். இந்த ஆண்டு சட்ட ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி திருவிழா நடத்துவதற்கு அரசு அதிகாரிகள் அனுமதி மறுத்து வருகின்றனர். அனைத்து சமுதாய மக்களையும் அழைத்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தி திருவிழா நடத்த அனுமதி வழங்கக் கோரி அனைத்து சமுதாய மக்கள் இணைந்து எழுமலை முத்தாலம்மன் கோயில் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து கடைகளும் அடைத்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட முத்தாலம்மன் கோயில் நிர்வாக கமிட்டியினர், அனைத்து உறவின்முறை தலைவர்களிடம் போலீசார், உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பன் பேச்சு வார்த்தை நடத்தினர். கோயில் வழிபாட்டுக்கு அனுமதி குறித்து இன்று உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்துவது என முடிவு செய்தனர்.