திருப்பதி அலிபிரியில் பக்தர்கள் தங்கும் பழங்கால மண்டபம் புனரமைப்பு; பணிகள் விரைவில் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2023 02:10
திருப்பதி: திருமலை நடைபாதையில் உள்ள அலிபிரி பாத மண்டபத்தில் சிதிலமடைந்த பக்தர்கள் தங்கும் பழமையான கல் மண்டபம் விரைவில் புனரமைக்கப்படும் நிர்வாக அதிகாரி ஏ.வி.தர்ம ரெட்டி தெரிவித்துள்ளார்.
இன்று காலை அலிபிரி பாத மண்டபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நிர்வாக அதிகாரி பேசியதாவது; 16ம் நூற்றாண்டில் ஸ்ரீவாரி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களுக்காக நடைபாதையின் இருபுறமும் இரு கல் மண்டபங்களை அப்போதைய மன்னர்கள் கட்டினர். இதில் ஒரு மண்டபம் இடிந்து விழும் நிலையை அடைந்துள்ளதாகவும், இதற்கு முன் ஒரு முறை இந்த மண்டபம் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த மணிமண்டபத்தை சீரமைக்க இயலாது என பொறியியல் துறை அளித்த அறிக்கையை அடுத்து, இதனை மீண்டும் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. புனரமைப்பில் கல் தூண்கள் மற்றும் கூரை பயன்படுத்தப்படும். இந்த மண்டபத்தின் பின்புறம் உள்ள சுவர் முற்றிலுமாக இடிந்து விழுந்து பக்தர்கள் மண்டபத்திற்குள் நுழையாமல் இருக்க வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கல் மண்டபம் சீரமைப்பு பணி ரூ.1.36 கோடியில் விரைவில் தொடங்கப்படும் என்றார். இதில் தலைமை அதிகாரி, ஜெகதீஷ்வர் ரெட்டி, பிரசாத், பிரகாஷ் பாபு, பாலகிருஷ்ணா மற்றும் பலர் பங்கேற்றனர்.