பதிவு செய்த நாள்
04
அக்
2023
04:10
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் ரூ.1 கோடி செலவில் கோயில் நிர்வாகம் கட்டிய பக்தர்கள் தங்கும் விடுதி 5 ஆண்டுகளாக பயன்பாடின்றி முடங்கி கிடக்கிறது. இதனால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்குள்ள தனியார் விடுதியில் தங்க வசதியின்றி, பலரும் கோயில் நான்கு ரதவீதி, அக்னி தீர்த்த கடற்கரையில் ஓய்வெடுத்து, புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். சுத்தமான குடிநீர், சுகாதாரமின்றி அமர்ந்து சாப்பிடும் பக்தர்கள் சில சமயம் உடமைகளை திருடர்களிடம் பறிகொடுத்தும் தவித்தனர். இதனை தவிர்க்க ராமேஸ்வரம் கோயில் நிர்வாகம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் ரூ.1 கோடி செலவில் ஆண், பெண் பக்தர்களுக்கு தனியாக இலவச தங்கும் விடுதிகள் அமைத்து 2016ல் திறந்தது. துவக்கத்தில் பக்தர்கள் தங்கிய நிலையில்,, இங்கிருந்து 400 மீட்டர் தூரமுள்ள கோயிலுக்கு சென்று வர போக்குவரத்து வசதி இல்லாததால், பக்தர்கள் இங்கு தங்குவதை தவிர்த்தனர். இதனால் 2018 முதல் தங்கும் விடுதி பக்தர்களின் பயன்பாடின்றி 5 ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது. இதனால் இரவில் சமூக விரோதிகள் புகுந்து மது குடிக்கும் பார் ஆக மாற்றி சமூக விரோத செயலில் ஈடுபடுகின்றனர். இதனால் இரும்பு கதவுகள், குடிநீர் குழாய்கள், கழிப்பறைகள் கதவுகள், விடுதியின் மேற்கூரை தகடுகள் உடைந்து அலங்கோலமாய் கிடப்பதால், பக்தர்களின் காணிக்கை நிதி ரூ.1 கோடி வீணாகி போனது.
கார் வசதி : முடங்கி கிடக்கும் இந்த தங்கும் விடுதியில் இருந்து கோயில் வரை பேட்டரி கார் அல்லது பிற வாகனங்களை இயக்கினால் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும். மேலும் ஏழை, நடுத்தர குடும்ப பக்தர்கள் தங்கும் விடுதியை பயன்படுத்த கூடும். எனவே வீணாகி போகும் தங்கும் விடுதியை பாதுகாக்க, ஹிந்து அறநிலைத்துறை ஆணையர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி கூறுகையில் : தங்கும் விடுதியை தற்போதைய அரசு முடக்கி வைத்துள்ளது. இக்கோயிலில் ஓராண்டுக்கு பக்தர்கள் மூலம் ரூ. 30 கோடி வருமாய் கிடைத்தும், விடுதியில் இருந்து போக்குவரத்து வசதி ஏற்படுத்த முன்வராதது வேதனைக்குரியது. இதற்கு விரைவில் தீர்வு காண விடில் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.