பதிவு செய்த நாள்
06
அக்
2023
05:10
சென்னை:சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், 2 கோடி ரூபாய் மதிப்பிலான, 18ம் நுாற்றாண்டை சார்ந்த விநாயகர் மற்றும் மாணிக்கவாசகர் ஐம்பொன் சிலைகளை மீட்டு, மூவரை கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டியை சேர்ந்த பாலமுருகன், 36, என்பவர், பழமையான மாணிக்கவாசகர் ஐம்பொன் சிலையை, விற்க முயற்சி செய்வதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சைலேஷ் குமார் யாதவுக்கு தகவல் கிடைத்தது. உடன் போலீஸ் அதி காரிகள் இடம்பெற்ற தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர், சிலை வாங்கும் நபர்களை போல, புரோக்கர் பாலமுருகனை அணுகினர். ஆனால், பாலமுருகனின் நம்பிக்கையை பெற, தனிப்படையினருக்கு, 10 நாட்களுக்கு மேல் ஆனது. இறுதியாக, சிலையை காட்ட ஒப்புக் கொண்டதுடன், சிலையின் மதிப்பாக, 2 கோடி ரூபாய் என பேரம் பேசியுள்ளார். அத்துடன், சென்னையை சேர்ந்த நண்பர் பிரபாகரன் என்பவரிடம், ஒரு விநாயகர் சிலை உள்ளது என கூறியுள்ளார். அந்த சிலையை வாங்கித் தர, சென்னை வரும்படி அவரை போலீசார் அழைத்தனர். முதலில் மறுத்தவர், கடும் முயற்சிக்குப் பின், தனிப்படை போலீசாருடன் சென்னை வந்தார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே, தனிப்படையினர் காத்திருந்தபோது, சென்னை அம்பத்துாரை சேர்ந்த பிரபாகரன், 40, விருதுநகர் காரியாபட்டியை சேர்ந்த மணிகண்டன், 34, ஆகியோர், ஒரு பெட்டியில் மறைத்து வைத்த, விநாயகர் சிலையோடு வந்தனர். அதன் மதிப்பு, 4 கோடி ரூபாய் என தெரிவித்தனர். இதைதொடர்ந்து, மூவரையும் சுற்றி வளைத்து தனிப்படை போலீசார் கைது செய்து, இரண்டு சிலைகளையும் மீட்டனர். மீட்கப்பட்ட மாணிக்கவாசகர் ஐம்பொன் சிலை, 25 செ.மீ., உயரம், 8 செ.மீ., அகலம் மற்றும் 1.5 கிலோ எடையிலானது. விநாயகர் ஐம்பொன் சிலை, 50 செ.மீ., உயரம், 26 செ.மீ., அகலம் மற்றும் 20 கிலோ எடையிலானது. இச்சிலைகள், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என் பது, முதற்கட்ட விசாரணை யில் தெரிய வந்துள்ளது. இரண்டு சிலைகளும், 18ம் நுாற்றாண்டை சேர்ந்தவை. அவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு, 2 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கலாம் என தெரிய வந்து உள்ளது.