பதிவு செய்த நாள்
10
அக்
2023
01:10
சென்னிமலை : சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலை, கல்வாரி (கிறிஸ்துவ மலையாக) மலையாக மாற்றுவோம் என்று பேசிய, கிறிஸ்தவ முன்னணி அமைப்பினரை கைது செய்யக்கோரி, சென்னிமலையில் வரும், 13ல் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை, முருங்கத்தொழுவு ஊராட்சி, கத்தக்கொடிக்காடு என்ற இடத்தில், ஹிந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அர்ஜூனன் என்ற ஜான் பீட்டர் வீட்டில், மதமாற்றம் செய்யும் நோக்கில், அனுமதியின்றி கிறிஸ்தவ அமைப்பு சார்பில், தொடர்ந்து ஞாயிறு தோறும் ஜெபக்கூட்டம் நடந்தது. வெளியூர்களில் இருந்தும் பலர் வந்தனர். ஒலிப்பெருகி மூலம் கூட்டம் நடத்துவதுடன், ஹிந்து தெய்வங்களை சாத்தான் எனக்கூறி இழிவுபடுத்தி பேசினர். இதனால் அப்பகுதி ஹிந்துக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கூட்டம் நடத்துவதால் பல்வேறு தொந்தரவுகளையும் சந்தித்து வந்தனர். கடந்த செப்.,17ம் தேதி வழக்கம்போல் ஜெபக்கூட்டம் நடந்தது. அங்கு சென்ற பாரதிய ஜனதா கட்சியினர், ஹிந்து முன்னணி அமைப்பினர், அனுமதியின்றி குடியிருப்பு பகுதியில், ஜெபக்கூட்டம் நடத்தக்கூாது என்று வலியுறுத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இந்நிலையில் பல்வேறு கிறிஸ்தவ அமைப்பினர், புரட்சிகர இளைஞர் முன்னணியினர், விடுதலை சிறுத்தை, ம.தி.மு.க., உட்பட அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால், ஜான் பீட்டர் கொடுத்த புகாரின்படி, சின்னச்சாமி, அவரது மகன் கோகுல் மற்றும் அடையாளம் தெரியாத இரண்டு பேர் மீது, கொலை முயற்சி உள்ளிட்ட ஆறு பிரிவுகளில், சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து ஹிந்து முன்னணி அமைப்பை சேர்ந்த அரச்சலுார், அண்ணா நகர் பூபதி, 38; தமிழரசன், 30, ஆகியோரை, கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். போலீசாரின் ஒரு தரப்பு நடவடிக்கையால் பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணி அமைப்பினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே சென்னிமலை பஸ் ஸ்டாண்ட் முன், கிறிஸ்தவ முன்னணி சார்பில், செப்., 26ம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள், ஜெபக்கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஒரு சிலரோ, கந்த சஷ்டி அரங்கேற்ற தலமாக விளங்கும் சென்னிமலை முருகன் கோவில் மலையை, கல்வாரி மலையாக (கிறிஸ்துவ மலையாக) மாற்றுவோம் என பேசினர். இதனால் பா.ஜ.,வினர் அதிர்ச்சி அடைந்தனர்.
மத கலவரத்தை துாண்டும் வகையில் பேசிய, கிறிஸ்தவ முன்னணி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஆர்ப்பாட்டம் நடந்த அதே நாளில், சிறிது நேரத்தில் பா.ஜ.,வினர் சென்னிமலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திகைத்த போலீசார், பா.ஜ., நிர்வாகிகளை சமாதானம் செய்து அனுப்பினர். இந்த தொடர் விவகாரத்தில் இதுவரை, கிறிஸ்தவ அமைப்பினர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல், ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னிமலை முருகன் கோவில் பக்தர்கள், கிரிவலம் வரும் வழியில், அய்யம்பாளையத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இருந்து, கிரிவலம் செல்லும் பக்தர்களை சாத்தான் செல்கிறது என்று விமர்சனம் செய்ததுடன் அவதுாறாக பேசியதாக புகார் எழுந்தது. இந்நிலையில் சென்னிமலையில் நடந்த கிறிஸ்தவ ஆர்ப்பாட்டத்தில், மத பிரச்னையை துாண்டும் வகையிலும், சென்னிமலை முருகன் கோவில் மலையை, கல்வாரி மலையாக மாற்றுவோம் என பேசிய கிறிஸ்தவ முன்னணியினரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, வரும், 13ம் தேதி மாலை, 4:00 மணிக்கு சென்னிமலை பஸ் ஸ்டாண்ட் முன், ஹிந்து முன்னணியினர், சென்னிமலை ஆண்டவர் குழு, ஊர்மக்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதனிடையே பொதுமக்கள் அறிவித்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஆதரவு திரட்டும் வகையில், பேச்சாளர் மஞ்சுநாதன் பேசிய வீடியோ பதிவு பரவி வருகிறது. சென்னிமலை முருகன் கோவில் மலையை, கல்வாரி மலையாக மாற்றுவோம் என பேசிய கிறிஸ்தவ அமைப்பினரின் செயல், சென்னிமலை முருகபக்தர்கள் மத்தியில், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே பல்வேறு ஹிந்து அமைப்புகள் சார்பில், போஸ்டர் ஒட்டியும், துண்டு பிரசுரம் வழங்கியும் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.
பிரச்னை விபரீதமாக காரணம் இதுதான்...!; ஜெபக்கூட்டம் நடத்திய சம்பவத்தில், பேசி முடித்து சுமூகமான நிலையில், பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர், வைகோ உட்பட பலர், கிறிஸ்தவ அமைப்பினருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இதனால் இந்த சம்பவம் மத பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது என்றும், முருக பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.